அரியலூரில் சம்பா சாகுபடிக்கு முன்பாக கொள்ளிடம் ஆற்றுப் பாசன ஏரிகளில் காவிரி நீரை நிரப்பிடக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், இன்று கோரிக்கை போராட்டம் நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்று பாசன கோட்டத்திற்குட்பட்ட ஏரிகளில் சம்பா சாகுபடி செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. சம்பா சாகுபடிக்கு முன்பாக திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து வரும் காவிரி நீரை, சுக்கிரன் ஏரி, வேட்டக்குடி ஏரி, மானோடை ஏரி, ஆன்டிஓடை ஏரி உள்ளிட்ட ஏரிகளில் நிரப்பிட வேண்டும்.
மேலும் செந்துறை தாலுகாவில் உள்ள ராயபுரம் ஏரி, குழுமூர், உடையார்பாளையம் ஏரி, ஜெயங்கொண்டம் தாலுகாவில் உள்ள பொன்னேரி ஓடைகளை தூர்வாரி வடகிழக்கு பருவ மழை நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரை பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கப்பெறாதவர்களுக்கு, பயிர் காப்பீட்டு தொகை கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான மானிய திட்டங்களை காலம் தாழ்த்தாமல் விவசாயிகளுக்கு கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் திரும்பிச் சென்றனர்.