தஞ்சாவூர்,மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கி வந்து நோயாளி சாப்பிட முயன்ற போது, சாம்பாரில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நோயாளியின் உறவினர்கள், உணவகத்தில் பணியில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, தகவல் அறிந்த உணவுப் பாதுகாப்புதுறை நியமன அலுவலர் பா.விஜய லலிதாம்பிகை மற்றும் விஜய், சுப்பிரமணியம், ரெங்கராஜ், சந்திரமோகன் உள்ளிட்டோர், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று, சம்மந்தப்பட்ட உணவகத்தை ஆய்வு செய்தனர். அப்போது உணவகம் சுகாதாரமற்ற முறையில் இருந்தது. மேலும், உணவகத்தின் லைசென்ஸ் கடந்த ஆறு மாதமாக, புதுப்பிக்காமல் செயல்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்து, உணவகத்தினை பூட்டினர். இது தொடர்பாக உணவகத்தின் ஒப்பந்ததாரர் சுதாகரன் என்பவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
