Skip to content

திருப்பூரில் 2 பள்ளிமாணவிகள் நடுரோட்டில் மோதியதால் பரபரப்பு

திருப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் மாணவிகள் சிலர் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து அதில் வீடியோக்கள் மற்றும் பதிவுகளை போட்டு வந்துள்ளனர்.  அதுவும் கல்வி சம்பந்தமாகவோ, குழுவாக இணைந்து படிப்பதையோ, எப்படி படிக்க வேண்டும் என்பதை பற்றிய வீடியோக்களோ அல்ல..  சமூக வலைத்தளங்களில் தாங்கள் தான் கெத்து என்ற பாணியில் கேங்காக இணைந்து ரீல்ஸ் பதிவிட்டு வந்ததாக தெரிகிறது.

இதேபோல  திருப்பூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவிகளும் கேங்க் ஃபார்ம் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போட்டு வந்துள்ளனர். இதில் இரு பள்ளிகளுக்கும் இடையில் நான் பெரிய ஆளா? நீ பெரிய ஆளா? என்கிற பனிப்போர் இருந்து வந்துள்ளது. ஆகையால் போட்டிபோட்டு இன்ஸ்டகிராமில் வீடியோக்களை போட்டு கெத்து காட்டியுள்ளனர்.  இதில் இன்ஸ்டகிராம் சாட்டிங்கில் இரு பள்ளி மாணவர்களுக்கும் இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது.

இதில் கணபதிபாளையம் பள்ளி மாணவிகள், “இதுபோன்று  பேசிக்கொண்டு எங்கள் பள்ளி இருக்கும் பக்கம் வந்துவிடாதீர்கள்.. அப்புறம்  உங்களுக்கு விழப்போகும் அடிக்கு நாங்கள் பொறுப்பில்லை’ என்று கூறியிருக்கிறார்கள்..  இதனை தன்மான பிரச்சனையாக கருதிய திருப்பூர் பள்ளி மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சீருடையிலேயே 10 கி.மீ தூரம் பயணம் செய்து கணபதிபாளையம் சென்றுள்ளனர்.

அங்கு கணபதிபாளையம் பள்ளி முன்பு சென்று அந்த மாணவிகளிடம் சாலையிலேயே தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சண்டை பெரிதானதில் சாலையே போர்க்களமானது. இதில்   மாணவிகள் சிலர்  கர்சீஃபை வைத்து  முகத்தை மறைத்துக் கொண்டும், பலர் முகத்தை மறைக்காமலும் சாலையில் குடுமிபுடி சண்டை போட  அந்த பகுதியே போர்க்கோலம் ஆகிவிட்டது. சாலை முழுவதும் மாணவிகளின் அடிதடியை பார்த்து பொதுமக்கள் திகைத்துப்போயினர். அவர்களில் ஒரு சில பெரியவர்கள் மட்டும் சண்டையை தடுக்க முற்பட்டுள்ளனர்.

மாணவிகளை சமாதானம் செய்ய முயன்ற பெரியவர்களிடமும்  மாணவிகள், ‘உங்கள் வேலையை பாருங்கள்’எனக்கூறி சண்டை போட்டுள்ளனர்.  இது பற்றி பள்ளி சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார், தகராறில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். நடுரோட்டில் பள்ளி மாணவிகள் தாக்கிக்கொள்ளும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

error: Content is protected !!