அரியலூர் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர்கள் முருகன். சரஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர்களின் மகளான மஞ்சு என்பவர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு குரூப் 2 தேர்வு எழுதுவதற்காக ஈரோட்டில் உள்ள தனியார் அகாடமி ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்காக தன்னை தயார் செய்துள்ளார்.
கடந்த 23.5.2025 அன்று ஈரோட்டில் உள்ள தனியார் அகாடமிக்கு போட்டித் தேர்வுக்கு கல்வியை தொடங்க அன்றுதான் சென்றுள்ளார். அப்போது ஈரோட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்த மஞ்சு உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மஞ்சு மூளைச் சாவு அடைந்தார்.
உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மஞ்சுவை கொண்டு சென்றனர்., பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்க பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மஞ்சுவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இருதயம், கண், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் உள்ளிட்ட ஆறு உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர்
மஞ்சுவின் உடல் நல்லடக்கத்திற்காக இன்று அரியலூர் வ.உ.சி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மஞ்சுவின் உடலுக்கு அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்டாட்சியர் முத்துலட்சுமி ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் மஞ்சுவின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். அரியலூர் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரும் கலந்து கொண்டு மஞ்சுவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கல்வி கற்க சென்ற மஞ்சு இன்று நம்மிடம் இல்லை என்றாலும், கண், இருதயம் உள்ளிட்ட ஆறு உறுப்புகளை தானமாக வழங்கி நம்மோடு வாழ்ந்து வருகிறார்.
