தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணையா – செல்வி தம்பதி. இவர்களின் மூத்த மகள் பாண்டிமீனா, நர்சிங் படித்தவர். இரண்டாவது மகள் பாண்டிஸ்வரி. கண்ணையா நுரையீரல் பாதிப்பாலும், செல்வி சிறுநீரக பாதிப்பாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு அடுத்தடுத்து இறந்து விட்டனர்.
இதில் நிலைகுலைந்து போன பாண்டிமீனா. கடந்த 2022ம் ஆண்டு தஞ்சாவூர் கலெக்டராக பணியாற்றிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை, நேரில் சந்தித்து, தான் வசிக்கும் வீட்டின் போட்டோவுடன், தனது நிலையை எடுத்துக்கூறி உதவி கேட்டார்.
பாண்டிமீனாவின் பரிதாபமான நிலையை உணர்ந்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2.40 லட்சம் ரூபாய், தன் விருப்ப நிதியில் இருந்து 1.50 லட்சம் ரூபாய், தன்னார்வலர்கள் மற்றும் பேராவூரணி லன்யஸ் கிளப் சார்பில் சுமார் 1.50 லட்சம் ரூபாய் என நிதியுதவி அளித்து , வீடு ஒன்றை கட்ட நடவடிக்கை எடுத்தார்.
2022ம் ஆண்டு பாண்டிமீனாவின் புதிய வீட்டிற்கு சென்று, குத்துவிளக்கு ஏற்றி பாண்டிமீனாளிடம் வீட்டை ஒப்படைத்தார்.
அதன் பிறகு பாண்டிமீனா மற்றும் அவரது சகோதரி பாண்டிஸ்வரி இருவரையும், தனது மகள்களாக நினைத்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பேராவூரணியில், பாண்டிமீனாவுக்கும், அபிமன்யு என்பவருக்கும் , தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தனது செலவில் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். அப்போது, பாண்டிமீனாவை மகளாகவே நினைத்து வளர்த்தேன், நல்லபடி பார்த்துக்கொள் என மணமகனிடம் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதும், பாண்டிமீனா உட்பட அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.
இதுகுறித்து பாண்டிமீனா கூறியதாவது: என் பெற்றோர் மறைந்த பின், என்னையும் என் தங்கையையும் தனது குழந்தைகள் போலவே கவனித்துக்கொண்டார். தஞ்சாவூர் கலெக்டராக இருந்தபோதும், தற்போது பத்திர பதிவுத்துறையில் ஐ.ஜி.யாக இருந்தாலும், இந்த ஏழைகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். குடிசை வீட்டு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து, புதிய வீடு கட்டிக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து என் திருமணத்தையும் தனது செலவில் நடத்தி வைத்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது திருமணம் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகும் என கூறினார்.
திருமண விழாவுக்கு ஊர் மக்கள் திரளாக வந்திருந்தனர். அவர்கள் பத்திரப்பதிவு துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் மனிதாபிமான செயலை பாராட்டினர்.