தஞ்சாவூர் மாதா கோட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் இவர் பேட்டரி கடை நடத்தி வருகிறார். இவரது ஒரே மகன் ஸ்ரீராம், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ( வேலம்மாள் போதி கேம்பஸ்) 11 ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை ஸ்ரீராம், வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அவனை தூக்கில் இருந்து மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டான் என கூறி உள்ளனர்.
இதனையடுத்து மாணவனின் இறப்பை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் பெற்றோர் வீட்டிற்கு சென்று மாணவனின் அறையை பார்த்த போது கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.
அதில் பள்ளி வகுப்பறையில் தனது தோழியுடன் பேசிக்கொண்டு இருந்த போது, அதனை பார்த்த 11 ம் வகுப்பு ஆசிரியர் தவறாக புரிந்து கொண்டு தரக்குறைவாக பேசியதாகவும், மேலும் சக மாணவர்கள் முன்னிலையில்அவமானப்படுத்தும் விதமாக பேசியதாகவும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், மாணவர் கடிதத்தில் எழுதியுள்ளார்.
இரண்டு நாட்கள் பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு சென்றால் ஆசிரியர் அவமானப்படுத்துவார் என நினைத்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்களும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பள்ளியில் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.