திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதி (50) இவரது கணவர் முருகன். இவர்களுக்கு ராஜேஸ்வரி (30) என்ற மகளும், சவுந்தரபாண்டியன் (28) என்ற மகனும் உள்ளனர். முருகன் இறந்து விட்டதால், ஜோதி செருப்பு தைக்கும் தொழில் செய்து தனது மகன், மகளை காப்பாற்றி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை திடீரென மழை பெய்துள்ளது. இதனால் வெளியே காய வைத்த துணிகளை எடுக்க ஜோதி சென்றுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஜோதியை காப்பாற்றுவதற்காக ராஜேஸ்வரியும், சவுந்தரபாண்டியனும் அங்கு ஓடி வந்தனர். அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியது. ஆனால் அவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். பின்னர் மயங்கி கிடந்த ஜோதியை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.