மதுரை மாவட்டம் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையை நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அதிமுக-வினர் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சிலை சேதம் அடைந்தது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில்..
மதுரை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி, வாடிவாசல் அருகே அமைந்துள்ள இதயதெய்வம் புரட்சிக் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது.
புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.
சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும்,
அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது. இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.