Skip to content

தீபாவளி-தஞ்சை காந்திஜி சாலையில் காவல் உதவி மையம் திறப்பு..

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள், இனிப்புகள் போன்றவற்றை வாங்குவதற்காக கடைத்தெருகளில் குவிந்து வருகின்றனர், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தை சுற்றி அதிக அளவில் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக ஸ்வீட் ஸ்டால், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் என ஏராளமாக உள்ளன. சாதாரண நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பகுதிகளில் மக்கள் நெருக்கடி அதிக அளவில் இருக்கும். விழா காலங்களில் காந்திஜி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் அனுப்பப்படும். அந்த அளவிற்கு மக்கள் நெருக்கடி மிகுந்த சாலையாக காந்திஜி சாலை உள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது இப்போதில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஜவுளிகள் எடுக்க குவிந்து

விடுவார்கள். இதனால் பல்வேறு சிரமங்களை போக்கும் விதத்திலும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் காந்திஜி சாலை மணிக்கூண்டு அருகில் காவல் உதவி மையத்தை மாவட்ட எஸ்பி ராஜாராம் இன்று திறந்து வைத்தார்,

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் நெருக்கடி மிகுந்த இந்த காந்திஜி சாலையில் காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. காவல் உதவி மையம் பொதுமக்களில் பிரச்சனைகள் குறித்து உடனுக்குடன் தீர்வு காண்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை நகரின் அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 800 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டும். குழந்தைகளை தனியாக வெளியே வெடிக்க அனுப்பக்கூடாது. நீளமான ஊதுபத்தியை கொண்டு வெடி வெடிக்க குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். பெற்றோர்களும் குழந்தைகள் வெடி வெடிக்கும் போது அருகிலேயே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் நகர டிஎஸ்பி சோமசுந்தரம், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி, போக்குவரத்து காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.ஜி. ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!