திருச்சி மாநகர் புத்தூர் நான்கு ரோடு பகுதியில் ஜெனட் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத்திற்கு பெயர் பெற்ற மருத்துவமனையாகும். ஆகையால் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மகப்பேறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி, நகர் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கும் ஜெயராணி என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது.
ஜெயராணிக்கு 6 வருடங்களாக குழந்தை இல்லாததாலும், அவரது வயிற்றில் கட்டி இருப்பதாலும் திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மகப்பேறு ஜெனட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஜெயராணி கர்ப்பம் தரித்துள்ளார்.
மேலும் ஜெயராணி கர்ப்பம் தரித்தாலும், கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை வாயில் 7 கட்டிகள் இருந்ததால் குழந்தைக்கு பாதிப்பு உள்ள கட்டிகளை மட்டும் அகற்றுவதற்கான சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1ம் தேதி பிரசவத்திற்காக ஜெயராணி அனுமதிக்கப்பட்டு கடந்த 3ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தாய், சேய் இருவரும் மூன்று நாட்கள் வரை நலமாக இருந்துள்ளனர். கடந்த 7ம் தேதி அன்று ரத்த அணுக்கள் சீராக இருந்துள்ளது. அதன் பின் அடுத்தடுத்த நாட்களில் ரத்த அணுக்கள் குறைந்துள்ளதால் அதற்கு சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் ஜெயராணி நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில் நேற்று ஜெயராணியின் உடல்நிலை மோசமாக இருந்ததாக அவரது கணவர் ஜான்சன் மற்றும் ஜெயராணி சகோதரி மருத்துவரிடம் தெரிவித்தது மட்டுமல்லாமல் சக மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஜெயராணியை சோதனை செய்தபோது ரத்த அணுக்கள் மிகவும் குறைவாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே

உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனே மருத்துவமனை நிர்வாகம் உடற்கூறு ஆய்விற்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு நேற்று இரவு ஜெயரானின் உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று மீண்டும் புத்தூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஜெனட் மருத்துவமனை முன்பு மருத்துவமனை நிர்வாகம் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டும் மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரிலும், ஜெனட் மருத்துவமனையின் மீது வழக்கு பதிவு செய்ததினால் கலைந்து சென்றனர். பின்னர் அரசு தலைமை மருத்துவமனையில் ஜெயராணியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து அவரது கணவர் ஜான்சன் மற்றும் உறவினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஜெயராணியின் கணவர் சகோதரி, உறவினர்கள் கூறும்போது….
ஜெனட் மருத்துவமனையில் உள்ள மருத்துவர் விக்டோரியா ஜான்சன் அலட்சியப் போக்கில் தான் ஜெயராணி உயிரிழந்தார். அறுவை சிகிச்சையின் போது மருத்துவர் மலக்குடலை கிழித்ததால் உயிரிழந்தார் என்றும் மேல் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் சேர்த்தபோது அங்கு மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் மேலும் ஜெயராணியின் உயிரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

