பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் மாலையணிந்து ஒரு மண்டலம் விரதமிருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம்.
கார்த்திகை முதல் நாளான இன்று ஐயனுக்கு விரதம் தொடங்க உகந்தநாள் என்பதால், இந்த ஆண்டு ஒருமண்டல் விரதமிருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சந்நதியின் முன்பு காவி வேட்டியுடுத்தி, துளசிமணி மாலையணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.
திருச்சி மலைக்கோட்டை மாணிக்கவிநாயகர் சந்நதி, மற்றும் கண்டோன்மென்ட் ஐயப்பன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று மாலையணிந்து வருகின்றனர். இதேபோன்று தங்களது குருசாமியின் பாதத்தினைத் தொட்டு வணங்கி ஐயப்ப பக்தர்கள் அவர்களிடத்தில் மாலையணிந்து விரதத்தினைத் தொடங்கினர்.
வேண்டும் வரம்தரும் ஐயப்பனை நினைத்து விரதமிருந்தால் அனைத்து நற்பலன்களும் கிட்டுவதாகவும், கடும் நோன்பிருந்து ஐயப்பனை தரிசனம் செய்யும்பட்சத்தில் சகல செல்வங்களையும் ஐயப்பன் தந்தருள்வார் என்றும் தெரிவித்தனர்.
இதேபோல திருச்சி மாவட்டத்தில் சமயபுரம், துறையூர், முசிறி, லால்குடி, மணப்பாறை, வையம்பட்டி, திருவெறும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

