விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை. முறையாக கொள்முதல் செய்திருந்தால் நெல் ஈரப்பதம் பிரச்சனை வந்திருக்காது. நெல்லை எடைபோட போதிய ஆட்கள், போதிய வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை. அரசு காட்டிய நெல் கொள்முதல் தாமதத்தால் தான் இப்போது விவசாயிகள் தவிக்கிறார்கள். நெல்கொள்முதல் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் ஏற்கனவே பேசிய நிலையிலும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நெல்மணிகள் நனைந்துள்ள நிலையில் நானே நேரடியாக சென்று விவசாயிகளை சந்தித்தேன். எம்.எல்.ஏவான போதும், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னும் இப்போதும் நான் விவசாயிதான். இப்போது வரை நான் விவசாயம் செய்துகொண்டிருக்கிறேன்.
விவசாயிகள் நலனில் எப்போதும் அக்கறை உள்ள கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. ஆனால் தி.மு.க. விவசாயிகள் நலனில் போதிய அக்கறை காட்டுவதில்லை. பொறுப்பில் இருக்கும் டிஜிபி ஓய்வு பெறும் 3 மாதங்களுக்கு முன்பே அடுத்த டிஜிபி நியமனம் செய்வது தொடர்பாக பட்டியல் அனுப்ப வேண்டும். மாநில அரசுதான் அந்த பட்டியலை அனுப்ப வேண்டும்” என்றார்.

