தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் காவியா. இவர் ஆலங்குடி அரசு தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் காவியாவும் – பாபநாசம் பகுதி சேர்ந்த அஜித்குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவியாவிற்கு வேறு இடத்தில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த காவியாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் காவியா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் உயிரிழந்த காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில், பள்ளி ஆசிரியையை படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை சேர்ந்த அஜித்குமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை சிறைத்துறை காவலர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

