சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமாண்டப்பட்டியில், ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஓமலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ கென்னடி உட்பட 30- ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். இந்த பள்ளி தலைமை ஆசிரியர் அறை முன்பாக கரி தூள் கொண்டு நட்சத்திர வடிவில் கோலமிட்டு, அதன் நடுவில் மஞ்சள், குங்குமம், மரக்கட்டை பொம்மை மற்றும் முட்டை வைத்து மாந்திரீக பூஜை செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமை ஆசிரியர் அறையின் பூட்டப்பட்ட கதவில் மலர் மாலை மாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை வேளையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் , மாந்திரீக பூஜையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆசிரியர்கள் சிலர் , பூஜையில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை அகற்றி , தண்ணீர் ஊற்றி கழுவி விட்டனர். நள்ளிரவில் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் விடிய விடிய இந்த மாந்திரீக பூஜையில் ஈடுட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஓமலூர் போலீஸார் , பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மாந்திரீக கும்பல் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் ஆசிரியர் அறை முன்பாக ஏன்? பூஜை செய்யப்பட்டது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

