கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வடவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னத்துரை (64). இவரது நிலப் பட்டாவில் பெயர் தவறாக இருந்ததால், அதனைத் திருத்தம் செய்யக் கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் வடவம்பாடி கிராம நிர்வாக அலுவலராக (VAO) சிவக்குமார் (48) என்பவர் பணியில் சேர்ந்தார்.
பெயர் மாற்றத்தைச் செய்து தர சிவக்குமார், விவசாயி சின்னத்துரையிடம் 10,000 ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னத்துரை, இது குறித்து கரூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரின் ஆலோசனையின்படி, இன்று காலை ரசாயனப் பொடி தடவிய 10,000 ரூபாயைச் சின்னத்துரை வி.ஏ.ஓ சிவக்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி அன்புராஜ் ஜெயராஜா தலைமையிலான போலீசார், சிவக்குமாரைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். அரசு அதிகாரி லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

