தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் செங்கிப்பட்டி அருகே உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி மாலை அந்த 14 வயது சிறுமி பள்ளி முடிந்து வெளியில் வந்துள்ளார். அப்போது செங்கிப்பட்டி உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் தன் நண்பர்களான க,ராஜேஷ் என்கிற பிரகதீஸ்ராஜ் (31), பி.மதன் (20) மற்றும் ஒரு 17 வயது சிறுவனுடன் காரில் வந்துள்ளார்.
தொடர்ந்து பள்ளி முடித்து வீட்டுக்கு செல்ல பேருந்து நிறுத்தத்திற்கு வந்த அந்த 14 வயது சிறுமியை வழிமறித்து நீ என்னைதான் காதலிக்க வேண்டும். வேறு யாரையும் காதலித்தால் தொலைத்துவிடுவேன் என்று கூறி மிரட்டி கையை பிடித்து இழுத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார். மேலும் காரில் ஏற்றவும் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதற்குள் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தால் சிறுமியை விட்டு விட்டு அந்த 17 வயது சிறுவன் உட்பட 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகதீஸ்ராஜ், மதன் இருவரையும் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவர்கள் இருவரையும் தஞ்சாவூரில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இந்த சம்பவம் செங்கிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

