டில்லி, செங்கோட்டையில் குண்டு வெடிப்பு நடத்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்கள், நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய கோவில்களை தீவிரவாதிகள் இலக்குகளாக வைத்திருக்கலாம் என உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. பிப்ரவரி 6ம் தேதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்த மசூதி குண்டுவெடிப்பில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில், இந்தியாவில் முக்கியமான கோவில்களை குறிவைத்து ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் டெல்லி செங்கோட்டைக்கு வெளியே நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 12 பேர் பலியாகிய விவகாரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இது நடைபெற்று 3 மாதங்கள் நிறைவடையாத நிலையில், தற்போது மீண்டும் குண்டுவெடிப்பு குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பழைய டெல்லி, சாந்தினி சவுக், டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். சோதனையையும் அவர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். பொதுமக்களும் இந்த விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம், பொருட்கள் குறித்து காவல்துறைக்கு உடனே தகவல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

