சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இதற்காக மனைவி, 2 குழந்தைகள் மற்றும் தாயாருடன் காரில் புறப்பட்டார். காரை பழனி என்பவர் ஓட்டியுள்ளார். இந்த நிலையில், திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, காரில் சென்னைக்கு திரும்பியுள்ளார்.
அவர்களுடைய கார் தூத்துக்குடி, எட்டயபுரம் அருகே வந்தபோது, சாலையோரம் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த கார் திடீரென லாரியின் மீது மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில், பாஸ்கரன், வனிதா, வசந்தி, கார் ஓட்டுநர் பழனி என 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். பாஸ்கரனின் சந்தியா, பிரதீப் குமார் ஆகிய 2 குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று திரும்பியபோது, கார் விபத்தில் சிக்கியதில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகம் ஏற்படுத்தி உள்ளது.
