Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிகாலையில் பால்’ திருடும் தம்பதி… கோவையில் அதிர்ச்சி

கோவை மாநகரில் அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் உலா வரும் கணவன் – மனைவி ஜோடி, வீதிக்கு முன் இறக்கி வைக்கப்படும் பால் பாக்கெட்டுகளைத் திருடிச் செல்லும் வீடியோ வெளியாகி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உழைப்பால் பிழைக்கும் பால் முகவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் அரங்கேறி உள்ள இந்தத் திருட்டுச் சம்பவம் சமூக வலைதளங்களில் ‘வைரல்’ ஆகி வருகிறது.

​கோவை மாநகரின் பல்வேறு வீதிகளில் பால் முகவர்கள் அதிகாலையிலேயே பொதுமக்களுக்குப் பால் விநியோகம் செய்து வருகின்றனர். ஆவின் மற்றும் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகள் பிளாஸ்டிக் ட்ரேக்களில் அடுக்கி, முகவர்கள் குறிப்பிடும் இடங்களில் வாகனங்கள் மூலம் இறக்கி வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3.32 மணி அளவில் கோவை கோவில்மேடு பகுதியில் உள்ள பால் முகவர் டேவிட் என்பவருக்குச் சொந்தமான பால் பாக்கெட்டுகள் அவரது கடையின் முன் இறக்கி வைக்கப்பட்டு இருந்தன.

​அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மற்றும் மனைவி, ஆள் நடமாட்டம் இல்லாததைச் சாதகமாக்கி வாகனத்தை நிறுத்தினர்.

பின்னர், அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ட்ரேக்களில் இருந்து பால் பாக்கெட்டுகளைச் சாவகாசமாக எடுத்துத் தாங்கள் கொண்டு வந்த பைகளில் போட்டுக் கொண்டு அங்கிருந்து ‘எஸ்கேப்’ ஆகினர்.

காலை எழுந்து பால் பாக்கெட்டுகளைச் சரிபார்த்த முகவர் டேவிட், எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

​அருகே இருந்த சி.சி.டி.வி கேமராவை பார்த்த போது, கணவன் – மனைவி இருவரும் கூட்டாகச் சேர்ந்து பால் பாக்கெட்டுகளைத் திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

ஒரு பாக்கெட்டிற்கு சில காசுகள் மட்டுமே கமிஷன் கிடைக்கும் நிலையில், இது போன்ற திருட்டுகளால் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக முகவர் டேவிட் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.

இந்தச் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது கோவையில் உள்ள அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் வைரலாகி வருவதோடு, இத்தகைய ‘சில்லறை’ திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!