கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் மூதாட்டி உள்பட 2 பேர் கைது
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா ராம்ஜி நகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிய காட்டூர் தண்ணீர் தொட்டி அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த துளசி (வயது 85) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்த 80 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராம்ஜி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துளசியை கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
இதேபோல், இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ், விமல் பான் மசாலா உள்ளிட்ட 1.164 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பூலாங்குளத்துப்பட்டி சேர்ந்த தனபால் (50) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான தனபால் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நவல்பட்டு சோதனை சாவடி அருகே புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (28) என்பவரை நவல்பட்டு போலீசார் கைது செய்தனர்.
சூதாடிய 4 பேர் கைது
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த சேனப்பநல்லூர் சாலையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சீட்டு விளையாடிக்கொண்டிருந்த புத்தனாம்பட்டியைச் சேர்ந்த சிவா (22), துரைராஜ் (27), ரெங்கராஜ் (43) மற்றும் மணிகண்டன் (31) ஆகிய 4 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து ஒரு கட்டு சீட்டுகள் மற்றும் பந்தய பணம் ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
