சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருஞானம் (42). இவர் சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேக்கரிகள் நடத்தி வருகிறார். கடந்த 22-ம் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 54½ பவுன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.1.05 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட மொத்தம் ரூ.29 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
மேலும், வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
