தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கணவர் மாரடைப்பால் இறந்த அதிர்ச்சி தாங்காமல், அடுத்த சில மணி நேரத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் மோத்திரப்பாச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (65) இவருடைய மனைவி சித்ரா (60). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். செல்வராஜ் மற்றும் சித்ரா தம்பதியினர் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக நகர்த்தி வந்தனர். சிலநாட்களுக்கு முன்பு செல்வராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆஞ்சியோ செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து நேற்று செல்வராஜூக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று இரவு செல்வராஜ் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இந்த தகவல் வீட்டில் இருந்த அவரது மனைவி சித்ராவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகாலம் இணைபிரியாமல் வாழ்ந்த கணவரின் திடீர் மரண செய்தி, மனைவி சித்ராவை நிலைகுலையச் செய்தது. இதனால் சித்ரா, “என்னைத் தனியாக விட்டுட்டுப் போயிட்டீங்களே” என்று கண்ணீர் விட்டு அழுதுகொண்டே இருந்தார். உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூற முயன்றனர்.
கணவரை இழந்த துக்கத்தையும், அதிர்ச்சியையும் சித்ராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கதறி அழுதுகொண்டிருந்த அவர், திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அங்கேயே சுருண்டு விழுந்தார். மயக்கமடைந்த அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். கணவர் இறந்த சில மணி நேரத்திலேயே மனைவியும் உயிரிழந்த சம்பவம் அங்கிருந்தோரை உறைந்துபோகச் செய்தது.
ஒரே நாளில் தங்களது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்துவிட்டு நிற்கும் பிள்ளைகளின் அழுகுரல், பார்ப்பவர் நெஞ்சைப் பிழிவதாக இருந்தது.
ஒரே வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் செல்வராஜ் – சித்ரா தம்பதியரின் உடல்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர்களது இறுதி ஊர்வலம் நாளை (ஜூன் 13) நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
