என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் உரையிலேயே புதிய திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த எந்த புதிய திட்டமும் இல்லை. 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் இடம்பெற்ற விஷயங்கள்தான் ஆளுநர் உரையில் உள்ளன. அதிமுக தலைமை சரியாக இருந்ததால்தான் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். எனது மகன் அரசியலுக்கு வருவது என்பது தவறு. என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். மிதுன் கட்சி பதவியில் இல்லை. அதிமுக அடிப்படை உறுப்பினராக மட்டும்தான் இருக்கிறார். இதுவரை சட்ட ஒழுங்கை காப்பதற்கு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை.. 38 நாட்களில் 105 பாலியல் வழக்குகள். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தவெக அரசாங்கத்தில் மக்கள் தூக்கத்தை தொலைத்து இரவில் போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். பியூஸ் கேரியரை பிடுங்கி சென்றால் தமிழ்நாடு முழுவதும் எப்படி மின்வெட்டு ஏற்படும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
