டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் 52-வது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பில் நீர்வளத் துறை செயலாளர் சத்யபிரதா சாகு மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின்போது, தங்கள் மாநில நீர் தேக்கங்களில் குறைந்த அளவே நீர் இருப்பதாகக் கர்நாடகா தரப்பில் கூறப்பட்டது. இதற்கு மறுப்புத் தெரிவித்த தமிழக அதிகாரிகள், “கோடைக் காலங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நீரை கர்நாடகா பயன்படுத்திவிட்டு, தற்போது நீர் குறைவாக இருப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது” என வாதிட்டனர். மேலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு மொத்தமாக 40 டி.எம்.சி காவிரி நீர் தேவை எனத் தமிழக அரசு தரப்பில் பலமாக வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணையம், ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி மற்றும் ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி என மொத்தம் 40 டி.எம்.சி தண்ணீரைத் தமிழகத்திற்கு உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
