அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கவுதம் பவுரா. இவருடைய மனைவி ஹரபி நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்காகக் கவுதம் பவுரா, தன் மனைவி மற்றும் ஆதரவாளர்களுடன் கவுகாத்தி மற்றும் வடக்கு கவுகாத்தியை இணைக்கும் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் இடையூறாகப் பாலத்தின் ஒரு பகுதியை முழுமையாக மறித்து, நடுரோட்டில் சிவப்பு கம்பளம் விரித்து, பலூன்களால் அலங்காரம் செய்து ஹரபியின் பிறந்தநாள் கேக் வெட்டுக் கொண்டாட்டம் அரங்கேறியுள்ளது. இந்த ஆடம்பரக் கொண்டாட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதோடு, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பொதுப் போக்குவரத்திற்கு முட்டுக்கட்டை போட்ட தொழிலதிபர் கவுதம் பவுரா, அவரது மனைவி ஹரபி மற்றும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் உட்பட மொத்தம் 14 பேர் மீது போலீசார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
