பூதலூர் அருகே ராயமுண்டான்பட்டியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் ராயமுண்டான் பட்டி கிராமத்தில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், குடிநீருக்காக அப்பகுதி மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை அலைய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அன்றாடத் தேவைக்கே தண்ணீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்த நிலையில், அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, தங்களுக்கு உடனடியாகக் குடிநீர் வழங்க வலியுறுத்தி, கிராம மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வட்டாட்சியர் மற்றும் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாகப் பொதுமக்களுக்குத் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூடுதலாக சின்டெக்ஸ் டேங்க் அமைத்து ஒரு வார காலத்திற்குள் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டக் குழுவினர் மறியலைக் கைவிட்டனர்.
