எல்நினோ தாக்கத்தால் உலகம் முழுவதும் பல பகுதிகளில் வரலாறு காணாத வறட்சி வெப்பம் அதிகரித்து வந்துள்ளது.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் கோடைகாலத்தைப் போன்று, வெயில் சுட்டெரித்து வருவதுடன் தொடர்ச்சியாக 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் பதிவாகி வருகிறது.
தற்போது பருவமழை பொய்த்து விட்டதாலும், காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீர் கிடைக்கப்பெறாததாலும், நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கும் எந்த முயற்சியும் செய்யாததாலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது
மேலும் டெல்டாவை வளம் கொடுக்க வைக்கும், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி ஆறும் வறண்டு போய் பாலைவனம் போல காட்சியளிப்பதுடன், திருச்சியிலுள்ள ஏரி, குளங்கள்

வரண்டு கிடக்கின்றன. தண்ணீர் இன்றி மானாவாரி மற்றும் கிணற்றுப் பாசனப் பயிர்கள் கருகி விவசாயிகளுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள், பொதுமக்கள், கால்நடைகள் மழை இல்லாததால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை தலைவர் முஹம்மது ரூருல் ஹக் ரஷாதி, செயலாளர் இன் ஆமுல் ஹசன் ஹஜ்ரத் தலைமையில் 1000க்கும்

மேற்பட்ட உலமாக்கள், ஆலிம்கள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்று தமிழகத்தில் மழை பெய்து வளம் பெருக வேண்டி முகமது நபி வழியில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
இவ்வாறு தொழுகை செய்வதன் மூலம் இறைவன் நிச்சயம் மழைபொழியச் செய்வார் என நம்பிக்கையில் அவர்கள் கைகளை உயர்த்தி, கண்ணீர் மல்க அனைவருக்காகவும் பிராத்தனையில் ஈடுபட்டனர்.
