தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் பைப் கடையில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.10,000 பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, ஆரியா பேக்கரி அருகில் ‘ஜி.ஆர். டிரேடர்ஸ்’ என்ற பெயரில் பைப் கடை நடத்தி வருபவர் கணேசன் (35). நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற கணேசன், இன்று காலை சுமார் 9:00 மணியளவில் கடையைத் திறக்க வந்துள்ளார்.
அப்போது கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் ₹10,000 ரொக்கப் பணம் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையின் பின்புறத்தைச் சென்று ஆய்வு செய்தபோது, அங்குப் பொருத்தப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் ஒரு பகுதியை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து முதலில் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கடை அமைந்திருக்கும் பகுதி சிப்காட் காவல் எல்லைக்குட்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கணேசன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகாரின் பேரில் சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கடையில் இருந்த பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
