டில்லி சத்தியா நிகேதனில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
டில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே அமைந்திருந்த இந்தக் கட்டடம், மாணவர்கள் தங்கும் விடுதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ‘ஹாஸ்டல் டயஸ்’ என அழைக்கப்பட்ட இந்தக் கட்டடம் நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.
கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிய நிலையில், டெல்லி பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர், தேசிய தீயணைப்புப் படையினர் மற்றும் போலீஸார் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதைக் கண்டறியும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கட்டடத்தில் அனுமதியின்றி கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநகராட்சியின் தகவலின்படி, சுமார் 495 சதுர அடி பரப்பளவில் அமைந்திருந்த இந்த இடத்தில் தரைத்தளம் மற்றும் ஒரு மாடி மட்டுமே கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இடிந்து விழுந்த கட்டடத்தில் தரைத்தளத்துக்கு மேல் நான்கு மாடிகளும், கீழ்த்தளத்தில் பேஸ்மென்ட்டும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடம் 1990-களின் இறுதியில் கட்டப்பட்டதாகவும், பின்னர் மாணவர்கள் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூடுதலாக இரண்டு மாடிகள் கட்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
