திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில்:-
காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் முக.ஸ்டாலின் விரைவில் குணமடைவார். நான் சென்னை திரும்பியவுடன் மருத்துவமனை சென்று நேரில் சந்தித்து நலம் விசாரிப்பேன்.
ஆர்ப்பாட்ட மேடைகளில் ஆ.ராசா மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் அரசியல் விமர்சனங்களைத் தாண்டி தனிநபர் ரீதியாகவும், பிறப்பு குறித்தும் கொச்சையாக விமர்சித்தது அதிர்ச்சி அளிக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஒருபோதும் நாகரீக வரம்பை மீறியதில்லை. ஆனால் தற்போது இவர்கள் பேசிய பேச்சு பொதுமக்களிடையே முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது.
குறுவை சாகுபடி தொடர்பாக விவசாயிகள் நேரில் என்னைசந்தித்து பேசினர். இது தொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசி உள்ளோம். விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது அவர்களுக்கு ஆறுதல் அளித்தது. ஆனால் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகள் திருப்தியடையவில்லை . அண்மையில் முதலமைச்சரை சந்தித்து கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். முதல்வர் இதனை பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்து உள்ளேன்.
பத்திரப்பதிவுத் துறையில் தனியார் நிறுவனத்தின் மூலம் வேலைக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டாகசம்பளம் வழங்கப்படாதது மற்றும் வேலைநீக்க மிரட்டல்கள் விடுக்கப்படுவது குறித்த தகவல் தற்போது ஊடகங்கள் மூலம் தன் கவனத்திற்கு வந்துள்ளது. முறையான புகார் அளிக்கப்பட்டால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம் குறித்த கேள்விக்கு? காலம் காலமாகச் சாதிவாத சக்திகள் புரட்சியாளர் அம்பேத்கரை அவமதிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போக்கு தலித் மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதாகும். புதியதோர் இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்ற கனவு கண்டவர் அம்பேத்கர். விளிம்புநிலை மக்களுக்காகவும், ஓபிசி சமூகத்தினருக்காகவும் தன் அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டுப் போராடிய அம்பேத்கரின் வரலாற்றை அறியாதவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் மின்வெட்டு நிலவுவது உண்மைதான் . அரசு இதிலே கூடுதல் கவனம் செலுத்தி சீரமைக்க நடவடிக்ககலை எடுக்க வேண்டும். அதிகாரிகள் முறையான ,சரியான தகவல்களை அமைச்சர்களுக்கு வழங்க வேண்டும்.
இடைத்தேர்தல்களில் பணத்தை கொட்டி வாக்குகளை விலைக்கு வாங்கும் கலாச்சாரம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமற்றது. இந்த இடைத்தேர்தலில் அப்படி நடக்க கூடாது. இதற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வாய்ப்பில்லை.தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும். இதனைத் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்.
அரசு பேருந்துகளில் தவெக வர்ணம் பூசப்பட்டுள்ளது குறித்த கேள்விகளுக்கு? அது ஏற்புடையதல்ல என தெரிவித்தார். திமுக கூட்டணியில் நாங்கள் நீண்ட காலமாக பயணித்துள்ளோம். நாங்கள் எப்படி பணியாற்றுவோம் என ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு தெரியும். ஆனால் திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறோம் என்ற பெயரில் சில பேர் எங்கள் மீது தேவையில்லாத அவதூறுகளை பரப்புகிறார்கள். துரோக பட்டத்தை சூட்டுகிறார்கள். திமுக கூட்டணியில் இருந்து பதவிக்காக நாங்கள் வெளியேறினோம் என்பதைப் போன்ற ஒரு தவறான தோற்றத்தை உருவாக்குவது சரியானது அல்ல. என்னுடைய தலைமைத்துவத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆக இதை பார்க்கிறேன். நாலு மாதமாக இதனை நான் தொடர்ந்து பேசி வருகிறேன். திமுக தன்னை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என்ற தேவை இருப்பதனால் அதனை நான் சுட்டிக்காட்டினேன் என தெரிவித்தார்.
