பாகல்பூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ கஞ்சா மற்றும் 800 கிராம் கஞ்சா சாக்லேட் ஆகியவற்றை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம் உட்கோட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் PC 627 பிரபாகரன், PC 650 தமிழ்செல்வன் ஆகியோர், ரயில் எண் 12254-ல் காட்பாடி முதல் ஜோலார்பேட்டை வரையிலான பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மேல்பட்டி ரயில் நிலையத்துக்கும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கும் இடையே, ரயிலின் பின்புற பொதுப்பெட்டியில் உள்ள ஒரு இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பொட்டலத்தை சோதனை செய்தபோது, அதில் 1.5 கிலோ கஞ்சா மற்றும் 800 கிராம் கஞ்சா சாக்லேட் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, மேல்நடவடிக்கைக்காக ஜோலார்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
