Skip to content
Home » தஞ்சையில் காதலியை கொன்று வாய்க்காலில் வீசிய பஸ் டிரைவர்…..

தஞ்சையில் காதலியை கொன்று வாய்க்காலில் வீசிய பஸ் டிரைவர்…..

தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதி தெற்கு தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் அகல்யா (26). கல்லூரி படிப்பை முடித்த இவர் பின்னர் அரசு பணி தேர்வுக்காக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில் பயிற்சி பெற்று வந்தார். இதற்க தினமும் மேலஉளூரில் இருந்து தனியார் பஸ்சில் வந்து சென்றார்.

வழக்கம் போல் கடந்த 6ம் தேதி தஞ்சைக்கு வந்த அகல்யா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். கடந்த 7ம் தேதி காலை வடசேரி பாசன வாய்க்காலில் ஒரு இளம்பெண் உடல் கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த பெண்ணின் கழுத்தில் துப்பட்டாவில் முடிச்சு போட்டு இழுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் அது மாயமான அகல்யா என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அகல்யாவின் செல்போன் சோதனை செய்தனர். இதில் தஞ்சாவூர் ஞானம் நகரை சேர்ந்த நாகராஜ் (25) என்பவர், அகல்யாவை கடைசியாக செல்போனில் தொடர்பு கொண்டது தெரியவந்தது. பின்னர் நாகராஜை பிடித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நாகராஜ் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மேலஉளூரில் இருந்து தினமும் தஞ்சாவூருக்கு வரும் அகல்யாவுடன் இவருக்கு கடந்த மூன்று மாதங்களாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். தான் திருமணம் ஆனவர் என்பதை அகல்யாவிடம் கூறாமல் நாகராஜ் மறைத்துள்ளார்.

மேலும், அடிக்கடி இருவரும் வெளியில் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில் நாகராஜ் திருமணமானவர் என அகல்யாவிற்கு தெரிய வந்துள்ளது. இதனால் அகல்யா, நாகராஜ் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளக் கூறி அகல்யா வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில்தான் கடந்த 6ம் தேதி அகல்யாவை, நாகராஜ் காரில் அழைத்து சென்றுள்ளார். காரில் செல்லும் போதே இருவருக்கும் மீண்டும் திருமணம் குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து புதுக்கோட்டை சாலை பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, அகல்யாவை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து நாகராஜ் கொலை செய்துள்ளார். பின்னர் அன்றிரவு அகல்யாவின் உடலை வடசேரி பாசன வாய்க்காலில் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் நாகராஜிடம் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!