தமிழில் ஜெமினி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். வில்லன், திவான், பரசுராம், அரசு, வின்னர், தென்னவன், நியூ, நாளை நமதே, சகுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். பல வருடங்களாக திரையில் அவரை காணமுடியவில்லை. இது குறித்து அவர் தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். நடிகை கிரண் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
“நான் தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானதும் இந்திக்கு சென்றேன். அங்கு வரவேற்பு இல்லாததால் மீண்டும் சென்னைக்கே வந்து செட்டில் ஆனேன். சினிமாவில் எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைத்தனர். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டதும் அவர்களது சுயரூபத்தை காட்டுவார்கள். இன்று இரவு வருகிறாயா.. இல்லையா? என்று சர்வ சாதாரணமாக கேட்பார்கள்.
இதற்கு உடன்பட மறுத்து, உடனே அந்த படத்தில் இருந்து வெளியே வந்து விடுவேன். நடிப்பை விட்டு விலகி ஏதாவது வியாபாரம் செய்யலாமா? என்றும் நினைத்தேன். அதுவும் ஒத்துவரவில்லை. நான்கு வருடங்கள் ஒருவரை காதலித்தேன் அவர் கெட்டவர் என தெரிந்து கொள்ள எனக்கு 4 வருடமாகி விட்டது. எனவே அந்த காதலை முறித்து விட்டேன். இப்போது அனைத்து பிரச்சினைகளும் நீங்கி விட்டன. காதலும் போய்விட்டது. பட வாய்ப்புகளும் வருகின்றன. தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை” என்றார்.