நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில், நடிகை திரிஷா குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இந்த கருத்துக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரைத்துறையிலும் கடும் எதிா்ப்பு கிளம்பியது. இதற்கிடையே சென்னை மாநகர போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடர்ந்தனர். நடிகர் சங்கமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் பெப்சி தலைவர் டைரக்டர் செல்வமணி இது குறித்து அளித்த பேட்டியில், மன்சூர் அலிகான் திறமையான நடிகர். அவரது பேச்சு தவறானது. எனவே அவர் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது. இல்லாவிட்டால் அவரது திறையுலக வாழ்க்கை பாதிக்கப்படும் ‘என்று ஆலோசனை வழங்கினார்.
இதற்கிடையே ஆயிரம் விளக்கு மகளிர் போலீசில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று மாலை அவர் போலீசில் ஆஜராகி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இன்று காலை பகிரங்க மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டதுடன், திரிஷா திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்துவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த அறிக்கை வெளியான சில மணி நேரத்தில் நடிகை திரிஷா எக்ஸ் வலைதளபக்கத்தில் மன்னித்து விட்டேன், தவறு செய்வது மனித இயல்பு. மன்னிப்பது தெய்வீகதன்மை வாய்ந்தது என்று கூறி உள்ளார். எனவே மன்சூர் அலிகான் மன்னிப்பை அவர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதன் மூலம் இந்த பிரச்னை முடிவுக்கு வந்து விட்டதாகவே கருதப்படுகிறது.