நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் தொகுதிப்பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசார குழு மற்றும் தேர்தல் விளம்பரக் குழு என 4 குழுக்களை அதிமுக அறிவித்தது. அதன்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் நத்தம் விஸ்வநாதன்,பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவின் ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அவர்கள் நீண்ட ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2021 ம் ஆண்டு திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையை பார்த்து மக்கள் ஏமாந்து விட்டனர். இனி எதற்கும் மக்கள் ஏமாற மாட்டார்கள். அதிமுக தேர்தல் அறிக்கையை பொறுத்தவரை மக்கள் நலன் சார்ந்த அறிக்கையாக இருக்கும். மாநில உரிமைகளை பேணிக் காக்கும் ஒரு அறிக்கையாக இருக்கும். தேர்தல் அறிக்கை குழு ஒன்று கூடி பணிகளை தொடங்கியுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோவாக அமையும். தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் தெரிய வரும். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.