திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா, இன்று காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சி நகரின் முக்கிய மார்க்கெட்டான காந்தி மார்க்கெட் பகுதிக்கு சென்ற வேட்பாளர் கருப்பையா வியாபாரிகள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது கீரை வியாபாரிகள் மத்தியில் வாக்கு கேட்ட கருப்பையா, சிறிது நேரம் கீரை வியாபாரம் செய்தார்.
தொடர்ந்து அவர் தரைக்கடை வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தபோது திரண்டிருந்த மக்கள் மத்தியில் வேட்பாளர் கருப்பையா பேசியதாவது:
என்னை வெற்றி பெறச்செய்தால், உங்களுக்காக, உங்களின் குரலாக, உங்களுக்கு ஆதரவாக வியாபாரிகளின் பிரதிநிதியாக, வியாபாரிகளின் எண்ணமாக, நிச்சயமாக என் எண்ணம் பிரதிபலிக்கும்.
உங்களுக்காக போராடுவேன், உங்களுக்காக குரல் கொடுப்பேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களிடம் எத்தனையோ பேர் வாக்கு சேகரிக்க வந்திருக்கலாம், நாங்கள் எது வேண்டுமானாலும் செய்து தருவோம் என அவர்கள் கூறியிருக்கலாம். ஆனால் நிச்சயமாக எந்த ஒரு நேரத்திலும் எப்பொழுதும், எந்த ஒரு இடத்திலும் இந்த கருப்பையா வியாபாரிகளின் பக்கம் தான் உறுதியாக இருப்பேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன் என்றார்.
பூ மார்க்கெட்டில் வாக்கு சேகரித்த கருப்பையாவுக்கு வியாபாரிகள் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், பகுதி கழகச் செயலாளர்கள் ரோஜர், சுரேஷ் குப்தா உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.