அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு இன்று தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.45 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டிருந்தனர்.
தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜிஆர் , ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க ஐகோர்ட் மறுத்து விட்டதால், ஏற்கனவே பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தார். கோர்ட் உத்தரவுபடி தேர்தல் முடிவு அறிவிக்கப்படாமல் இருந்தது.
இன்று கோர்ட் தீர்ப்பு வந்ததும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திய நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தனர்.
அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு கே.பி. முனுசாமி, ஜெயக்குமார், உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் மாலை, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதிமுக அலுவலகத்தில் செண்டை மேளம் முழங்க அதிமுகவினர் இதனை கொண்டாடினர்.