தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழக முன்னாள் முதல்வர்(ஜெயலலிதா) ஊழல் செய்து சிறைக்கு சென்று உள்ளார். இதனால் தான் தமிழகம் ஊழலில் நம்பர் 1 ஆக இருக்கிறது என கூறி இருந்தார். இந்த பேட்டி அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அண்ணாமலைக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:கட்சி தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை.அதிமுக தயவால் தான் பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். அதிமுகவுடன் இருந்தால் தான் பாஜகவுக்கு பலம். அண்ணாமலையின் பேச்சை கட்சியின் தேசிய தலைவர் நட்டா, அமித்ஷா ஆகியோர் கண்டிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை.
கூட்டணியை முறிக்கும் வகையில் அண்ணாமலை செயல்படுகிறார். பாஜகவுடன் கூட்டணி முறிந்தால் எங்களுக்கு இழப்பு இல்லை. அண்ணாமலை மீது தேசிய தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அண்ணாமலையின் பேச்சை எந்த அதிமுக தொண்டனும் ஏற்க மாட்டான்.
அதிமுக கூட்டணி அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை என்பது போல அவரது பேச்சு உள்ளது. கட்சிகளை விமர்சிப்பதற்கு ஒரு எல்லை உண்டு. எல்லாவற்றையும் தாங்கி கொண்டு இருக்க முடியாது. இனியும் அவரது பேச்சு தொடர்ந்தால் வாங்கி கட்டிக்கொள்வார்.
கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக தலைவரை(ஜெயலலிதா) விமர்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுய விளம்பரத்திற்காக பேசி வருகிறார்.வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைப்பது போல் அண்ணாமலையின் செயல் உள்ளதுஅண்ணாமலை விமர்சனம் தொடர்ந்தால் கூட்டணியில் விரிசல் ஏற்படும். கூட்டணி மறுபரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார். இந்த பேட்டியின் மூலம் அதிமுக-பாஜக கூட்டணியில் மீண்டும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.