ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோயில் காளைகளை விடப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியி1000 காளைகளும், 375வீரர்களும் களம் கண்டுள்ளனர். வெற்றி பெறும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளன. அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக ஒரு சொகுசு காரும், சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
இன்றைய போட்டியை அமைச்சர் உதயநிதியுடன், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடிகர் சூரி, ஆகியோரும் கண்டுகளித்தனர். போலி சான்றிதழ் கொடுத்த 2 வீரர்கள் இந்த போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். முதல் சுற்றில் 62 காளைகள் களம் கண்டனம். முதல் சுற்று முடிவில் 3 காளைகளை அடக்கிய சித்தாலங்குடி கோபாலகிருஷ்ணன் என்ற வீரர் முதலிடம் பிடித்தார். அடுத்ததாக 2 காளைகளை அடக்கிய வீரர் செந்தமிழ்ச்செல்வன் 2ம் இடத்தில் உள்ளார். மைதானத்தில் கெத்து காட்டி வீரர்களை ஒட ஓட விரட்டிய தஞ்சை காளைக்கு தங்க நாணயம் பரிசு கிடைத்தது.