ஆந்திராவைப் பொறுத்தவரை இந்த முறை பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி ஓரு பக்கமும் மற்றொரு பக்கம் சந்திரபாபு நாயுடு, பவன்கல்யாண், பாஜக ஆகியவை போட்டியிடுகின்றன. இதில் கடும் போட்டி நிலவுகிறது. இது தவிரக் காங்கிரஸ் கட்சியும் கூட அங்கே களத்தில் இருக்கிறது. தொடர்ந்து 2ஆவது முறையாக வென்று ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் ஜெகன்மோகன் ரெட்டி களமிறங்குகிறார். ஆந்திராவில் மீண்டும் ஜெகன்மோகன் வெல்ல வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த பேசிய கிஷோர், “தற்போதைய கள நிலவரத்தை வைத்துப் பார்க்கும் போது ஆந்திராவில் ஜெகன் மீண்டும் வெல்வது ரொம்பவே கடினம். சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் செய்த தவறையே தான் ஜெகன்மோகன் ரெட்டியும் செய்து இருக்கிறார். மக்கள் கனவுகளை நிறைவேற்றுபவர் என்ற நிலையில் இருந்து மக்களுக்குத் தேவையானதை வழங்குபவர் என்ற நிலைக்கு ஜெகன் சென்றுள்ளார். அதாவது பழங்கால மன்னர்கள் எப்படி தங்கள் மக்களுக்கு உணவுகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்களோ அதுபோல.. அதைத் தாண்டி அவர் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. அதேபோல ஜெகன்மோகன் ரெட்டி மக்களுக்கு நேரடியாகப் பல திட்டங்களில் பணத்தைக் கொடுத்தார். ஆனால் ஆந்திராவில் வேலைவாய்ப்பை அதிகரிக்க அவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல மாநிலத்தில் வளர்ச்சி தேக்கமடைந்து இருக்கும் நிலையில், அதைச் சரி செய்யவும் அவர் பெரிதாக எதையும் செய்யவில்லை இது தான் ஜெகனுக்கு பெரும் சவாலாக உள்ளது என பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார்.