Skip to content
Home » அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் சிகிச்சை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் சிகிச்சை

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  அவருக்கு  அமலாக்கத்துறை அதிகாரிகள் கொடுத்த டார்ச்சரால் நெஞ்சுவலி ஏற்பட்டது.  எனவே சென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டதில் இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காவேரி ஆஸ்பத்திரியில் அமைச்சருக்கு  இருதய ஆபரேசன் நடந்தது.

அமைச்சரின் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும்  அவருக்கு  ஜாமீன் மறுக்கப்பட்டு, காவல் நீடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று மாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இதயம் சார்ந்த பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கழுத்து வலிப்பதாகவும், கால் மறத்து போவதாகவும் கூறியதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என டாக்டர் பரிந்துரைத்தனர்.

இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு இதயவியல் பிரிவு தலைவர் மனோகரன் தலைமையிலான குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவருக்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து மருத்துவ பரிசோதனை முடிவுகளும் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கால் நரம்பு பகுதியில் அடிக்கடி வலி ஏற்படுவதாக செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதையடுத்து காலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காக மீண்டும் அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி இன்று அவருக்கு மீண்டும் ஆஞ்சியோ சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து இனி அடுத்தகட்ட  சிகிச்சைகள் தொடங்கும் என மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!