Skip to content
Home » அரியலூரில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

அரியலூரில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

தமிழக அரசு உத்தரவின்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினர், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அரசு சார்பில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்கள்.

இதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பிரதம மந்திரியின் சிறு மற்றும் குறு உணவு உற்பத்தியாளர்களுக்கான திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தியில் ஈடுபடும் 44 பெண் சுய உதவிக்குழு தொழில் முனைவோர்களுக்கு ரூ.16.52 இலட்சம் மதிப்பில் விதை மூலதன நிதியுதவித் தொகைக்கான காசோலையினையும், மேலும், தமிழ்நாடு நகர்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சியில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற 51 பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.

மேலும், மூலதன நிதியுதவி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு தொழில் முனைவோர் இந்நிதியின் மூலம் தொழிலை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடைந்து மேம்பாடு அடைவதுடன் திறன் வளர்ப்பு பயிற்சியில் தேர்ச்சிப்பெற்ற இளைஞர்கள் இப்பயிற்சியினை முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் எஸ்.முருகண்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!