சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவன் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஆனி மேரீி ஸ்வர்ணா, எம்எல்ஏக்கள் அரியலூர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் கண்ணன் ஆகியோர் முன்னிலையில், அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ள நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும் தொல். திருமாவளவன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் அரியலூர் நகரில் முக்கிய கடைவீதிகளில், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் எம்பியை காணவில்லை “கண்டா வரச் சொல்லுங்கள்” சிதம்பரம் நாடாளுமன்ற பொதுமக்கள் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. போஸ்டர் அச்சிடப்பட்ட அச்சகத்தின் பெயா் அதில் இடம் பெறவில்லை.
2009 மற்றும் 2019 ஆகிய இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தான் ஒரு கட்சியின் தலைவர் என்பதால் தொகுதிக்கு அதிகம் வர முடியவில்லை. ஆனாலும் தன்னால் முடிந்த அளவிற்கு மக்களின் வளர்ச்சி பணிகளை செயலாற்றி வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் இன்று தனது தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமாவளவன் ஆய்வு செய்து வரும் நிலையில், முக்கிய வீதிகளில் ஒட்டப்பட்டுள்ள எம்பிய கண்டா வரச் சொல்லுங்கள் என்ற போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.