அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023 தொடர்பான ஆய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் முனைவர்.எம்.வள்ளலார் தலைமையில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, 01.01.2023-ஆம் நாளை தகுதி நாளாக கொண்டு, அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் 2023-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி முன்னிலையில், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியரகத்தில் இன்றைய தினம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 05.01.2023 அன்று அரியலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட உள்ள முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வாக்காளர்களை நீக்குதல் மற்றும் சேர்த்தல் ஆகியவை முறைப்படி நடைபெற்றுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து, வாக்காளர் தினவிழா முன்னேற்பாடுகள் குறித்தும் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் முனைவர்.எம்.வள்ளலார் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.