தமிழகத்தில் மின்நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நவ.15-ம் தேதி தொடங்கியது. இணையதளம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்புமுகாம்கள் செயல்பட்டு பணிகள்நடந்து வருகின்றன. இதுவரை1.61 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர். இந்நிலையில், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (டிச.31) நிறைவடைகிறது. இன்னும் சுமார் 1.06 கோடிக்கும் மேற்பட்ட மின்நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மின் நுகர்வோர் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைகளை ஏற்று வரும் ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று சென்னையில் அறிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: ஜனவரி 31க்கு பிறகு கால அவகாசம் நீடிக்கப்படமாட்டாது. தினமும் 3 லட்சம் முதல் 4 லட்சம் பேர் வரை ஆதார் எண் இணைத்து வருகிறார்கள். 2811 நடமாடும் ஆதார் இணைப்பு வாகனங்களும் செயல்படும் பொதுமக்கள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை 1.61 கோடி பேர் இணைத்துள்ளனர். இது 60.8 சதவீதம் ஆகும். ஆதார் எண் இணைக்க பகுதி வாரியாகவும் சிறப்பு முகாம்கள் நடத்த இருக்கிறோம். மின்வாரியத்தை மேம்படுத்தவே இந்த இணைப்பு பணி.
இவ்வாறு அவர் கூறினார்.