மக்களவை தேர்தல் அறிவிப்பு தேதியை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி், சீட் ஒதுக்கீடு பணிக்கான வேலைகளை தொடங்கி விட்டன. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் திமுக கூட்டணி்யில் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டது.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இன்னும் பிரதான கட்சிகள் எதுவும் சேரவில்லை. இதே நிலைதான் பாஜகவிலும். மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி தான் அமையும் என்ற பேச்சு எழுந்துள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள பல கட்சிகள் இப்போது பாஜக பக்கம் சாய முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
குறிப்பாக பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் பேச்சுவார்த்தைக்கு வைக்கும் முதல் நிபந்தனை ஒரு ராஜ்யசபா சீட். இதில் பாமக ஒருபடி மேலே சென்று மத்திய அமைச்சர் பதவியும் கேட்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாமக 9பிளஸ்1 என்ற நிலையிலும், தேமுதிக 4பிளஸ் 1 என்ற நிலையிலும் டிமாண்ட் வைக்கிறார்கள். ஆனால் இதற்கு பாஜக ஒத்துகொண்டதாக தெரியவில்லை.
இந்த முறையும் பாஜக தமிழகத்தில் வெற்றி பெறாவிட்டாலும் கணிசமான ஓட்டு வாங்கியாக வேண்டும் என திட்டமிட்டுள்ளது. எனவே பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை விட்டுவிட பாஜகவுக்கு மனதில்லை. எனவே பேச்சுவார்த்தைையை துண்டித்து அதிமுக அணிக்கு இவர்களை அனுப்பிவிடக்கூடாது என்பதற்காக பேச்சுவார்த்தையை மெல்ல நகர்த்தி வருகிறார்கள்.
அதிமுகவுக்கும் இந்த தேர்தல் கவுரவ பிரச்னை. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனபின் சந்திக்கும் முதல் மக்களவை தேர்தல். இதில் பாஜகவுக்கு பாடம் புகட்டுவதுடன் தமிழ்நாட்டில் அதிமுக பிரதான கட்சி என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாமகவை இழுக்க எடப்பாடி தனது தூதராக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தை அனுப்பினார். அவர் நேற்று இரவு தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் அவர் 9 பிளஸ்1 தொகுதி கோரிக்கை வைத்ததுடன், நாங்கள் கேட்ட 5 தொகுதிகளை கண்டிப்பாக தரவேண்டும். மீதம் உள்ள 4 தொகுதி உங்கள் சாய்ஸ் என்ற அளவில் பேசினாராம்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பேசிவிட்டு வருவதாக அவர் சென்று உள்ளார். இந்த உடன்பாட்டுக்கு எடப்பாடி சம்மதித்தால் பாமக அதிமுகவுடன் சேருவது உறுதி. அதே நேரத்தில் தேமுதிக வைக்கும் 4 பிளஸ் 1 கோரிக்கைக்கு அதிமுக தரப்பில் பரிசீலிக்க வாய்ப்பு இல்லை. ராஜ்யசபா கிடையாது. எங்களிடம் இருப்பதேர 2 ராஜய்சபா சீட் தான். அதில் ஒன்று பாமகவுக்கும், இன்னொன்றை தேமுதிகவுக்கும் கொடுத்து விட்டால் எங்கள் நிலை என்ன? என்ற கேட்கிறார்கள். 4 மக்களவை தொகுதிகள் தருகிறோம் என்று கூறி வருகிறார்கள். எனவே தமிழகத்தை பொறுத்தவரை இப்போது தேர்தல் களத்தில் பாமக, தேமுதிகவின் மவுசு கூடி உள்ளது. மன்னார்குடியில கூப்பிட்டாக, மாயவரத்தில கூப்பிட்டாக என இரு கட்சிகளும் சொல்லிக்கொண்டு இருக்கின்றன. எந்த அணியில் இவர்கள் செட்டில் ஆகபோகிறார்கள் என்பது உறுதிபட சில நாட்கள் ஆகலாம். அதுவரை அரசியல் பரபரப்பு நீடிக்கும்.