தஞ்சை யாகப்பா நகரை சேர்ந்தவர் சுந்தர்கணேஷ்(42), தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். 2 வருடமாக வேலை இல்லை. இவரது மனைவி நித்யா(39). இவர் தஞ்சையில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் மேலாளராக இருக்கிறார். இன்று காலை 11 மணி அளவில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுந்தர்கணேஷ் மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு காரில் கோபத்துடன் வெளியே புறப்பட்டு சென்றார்.
அருகில் உள்ள ஒரு பால்பூத்துக்கு சென்றார். அங்கு இருந்த பரிசுத்த நகர் தாமரைச்செல்வன்(35), கீழதிருப்பூந்துருத்தி கோபி(32) ஆகியோைரையும் சரமாரியாக வெட்டினார். பின்னர் அவர் செங்கிப்பட்டி நோக்கி காரில் சென்றார்.
முத்தாண்டிப்பட்டி ஆர்ச் அருகே சென்றபோது கார் மீது லாரி மோதியது. இதில் சுந்தர் கணேஷ் அந்த இடத்திலேயே இறந்தார். கார் நொறுங்கியது.
மனைவியையும், பால்கடை ஊழியர்கள் 2 பேரையும் ஏன் வெட்டினார் என்பது குறித்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் மற்றும் தெற்கு போலீசார் விசாரிக்கிறார்கள். விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீசார் விசாரிக்கிறார்கள். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . வெட்டுக்காயம் பட்ட 3 பேரும் தஞ்சை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
சுந்தர் கணேஷ் தனது வீட்டை விற்க ஏற்பாடு செய்தாராம். இதற்கு மனைவி நித்யா எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.