நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 இடங்களை வெல்லப்போவதாக பிரசாரம் செய்து வந்தாலும், உள்ளபடியே அந்த கட்சிக்கு இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்ற தகவல் இப்போது வரத் தொடங்கி உள்ளதாம். இதனால் கட்சி உயர்மட்டத் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தி்லேயே 2 பாஜக வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
சபர்கந்தா தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிகாஜி தாகூர் திடீரென போட்டியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து கட்சி நிர்வாகிகள் மீண்டு வருவதற்குள், வதோதரா பாஜக வேட்பாளர் ரஞ்சன்பென் தனஞ்ஜெய் பட் தானும் போட்டியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். அடுத்தடுத்து விலகல் அறிவிப்புகள் வருவதால் குஜராத் பாஜக கலக்கத்தில் உள்ளது.