எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாஜக அரசுக்கு எளியோர் மீது அக்கறை இல்லை, பணக்காரர்களை பற்றியே கவலை கொள்கிறது எங்களது நோக்கம் விலைவாசியை குறைப்பதுதான். சமையல் எரிவாயு விலையை ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏற்றிவிட்டு ரூ.200 குறைத்து நாடகம் ஆடுகிறார்கள். மத்திய புலனாய்வு அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறது. ஊழலை ஒழிப்பதை பற்றி பேசும் பாஜகதான் மிகப்பெரிய ஊழலை செய்து வருகிறது. பயப்பட மாட்டோம், ஊழலையும் அடக்குமுறையையும் எதிர்த்து போராடுவோம்” என்றார்.
மும்பை கூட்டத்தில் பேசிய டில்லி முதல்வர் கெஜ்ரிவால், இது 28 தலைவர்களின் கூட்டணி அல்ல. 140 கோடி மக்களின் கூட்டணி. எனவே எங்கள் வெற்றி உறுதி என்றார்.
ராகுல் காந்தி எம்.பி. பேசியதாவது: பாஜகவே வீழ்த்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இந்த 3 கூட்டங்களும் எங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை சேர்த்து சீனா வரைபடம் வெளியிட்டுள்ளது. ஜி20 மாநாடு நடக்கும் இந்த நேரத்திலாவது பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும். பாஜகவை இந்தியா கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.