நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக தென்னிந்திய திருச்சபைகள் சார்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் கருப்பு சட்டை அணிந்து திருச்சபையினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மே மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை அன்று, மணிப்பூரில் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர். அது ஒரு வியாழக்கிழமை என்பதால் அந்த தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக கோவை திருமண்டல தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பினர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபைகள் மண்டல அலுவலகம் முன் கருப்பு சட்டை அணிந்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் நாடு முழுவதும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கருப்பு சட்டை அணிந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.இதில் பெண்ணுரிமை காப்போம்,பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.தென்னிந்திய திருச்சபைகளின் கோவை மண்டல பிஷப் திமோத்தி ரவீந்தர் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொருளாளர் டி.எஸ்.அமிர்தம்,செயலாளர் பிரின்ஸ் கால்வின்,துணைத் தலைவர் டேவிட் பர்ணபாஸ்,வாலிபர் அமைப்பு நிர்வாகிகள் டாக்டர் ப்ரீத்தி கரோலின்,ஜேகோ சாமுவேல் உட்பட தென்னிந்திய திருச்சபைகள் கோவை மண்டல நிர்வாகிகள்,உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.